அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மூன்று பெண்களை திருமணம் செய்த 41 வயதான அரசுப் பேருந்து நடத்துனர் ராதாகிருஷ்ணன் என்பவர், நான்காவதாக 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்தார். மாணவியின் தாய் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் அது.
தற்போது அச்சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார். இச்சம்பவம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தெரியவந்ததையடுத்து, ராதாகிருஷ்ணனும், சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டனர். சிறுமி காப்பகத்தில் உள்ளார். வறுமையின் காரணமாக சிறுமியை அத்தாய் திருமணம் செய்துவைத்ததாக சொல்லப்படுகிறது.
சமீபத்திய எடுத்துக்காட்டு இது. குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்ற போதிலும், திருமணத்தின் மீதான இந்திய சமூகத்தின் பார்வை, சமூக-அரசியல்-பொருளாதார சூழல், சமூக சீர்திருத்த திட்டங்கள் கடைக்கோடியை சென்றடையாதது, விழிப்புணர்வின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றளவும் இந்தியாவின் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குழந்தைத் திருமணங்கள் தினந்தோறும் நடந்தேறி வருகின்றன.
2019-ம் ஆண்டில் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக இருக்கும். உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகளில் பாதிக்கும் மேலானோர், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள். குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாக கூறுகிறது யுனிசெஃப்.
இந்நிலையில்தான், ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரும் வகையில், இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மத திருமணங்களுக்கும் இது பொருந்தும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.