முன்னாள் யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் வீரர் ஒருவரது இனவெறி குற்றச்சாட்டால் இங்கிலாந்து கிரிக்கெட்டில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுது அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன.
குற்றம்சாட்டிய வீரரின் பெயர் அஸீம் ரஃபீக். அவரது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையால், கவுண்டி கிளப்பில் பல உயர் அதிகாரிகள் பதவி விலகி இருக்கிறார்கள். அஸீம் ரஃபீக் 30 வயதான முன்னாள் தொழில்முறை கிரிக்கெட் வீரர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதி யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப்புக்காக ஆடியவர்.
பாகிஸ்தானில் பிறந்த ரஃபீக் 10 வயதில் இங்கிலாந்து சென்றார். அவர் இளைஞர் நிலையிலான இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தார். இறுதியாக 2012ல் யார்க்ஷயர் கவுன்டி அணியின் தலைவராானர். யார்க்ஷயர் கிளப்பில் இருந்த காலத்தில் தனது பாகிஸ்தானிய பாரம்பரியத்தைப் பற்றி இனவெறியுடன் பேசுவது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்டதாக ரஃபீக் குறிப்பிட்டார்.2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் ESPN Cricinfo இணையதளத்துக்கு அவர் ஒரு நேர்காணலை அளித்தார். அதில் யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் “அமைப்பு ரீதியிலான இனவெறி” தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளியதாகக் கூறினார்.
ரபீக்கின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து யார்க்ஷயர் கிளப் “முறையான விசாரணையை” தொடங்கியது. ஓராண்டு நீடித்த இந்த விசாரணைக்குப் பிறகு ரஃபீக் “இனரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்” என்பதை ஏற்றுக் கொள்வதாக யார்க்ஷயர் கூறியது. மேலும் ரஃபீக் கூறிய 43 குற்றச்சாட்டுகளில் ஏழு குற்றச்சாட்டுகளை சுயேச்சையான விசாரணைக் குழு உறுதி செய்தது.
இருப்பினும் “தனியுரிமைச் சட்டம் மற்றும் அவதூறு தொடர்பான” சட்ட காரணங்களுக்காக முழு அறிக்கையையும் வெளியிட மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அறிக்கையில் தெரிய வந்திருக்கும் காரணங்களுக்காக எந்தவொரு வீரரும், பணியாளரும், நிர்வாகியும் எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையையும் சந்திக்க வேண்டியிருக்காது என்று அக்டோபர் 28ஆம் தேதியன்று யார்க்ஷயர் கிளப் நிர்வாகம் அறிவித்தது.