”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
”இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது,” என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவொன்று, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர், முதலில் ஆசியாவிலேயே மிகப் பழைமை வாய்ந்த நூலகமாக விளங்கும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளார். நூலகத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்களை சீனா இதன்போது கையளித்துள்ளது.
சீனத் தூதுவர், யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் கலந்துக்கொண்டிருந்தார். சீன தூதுவர், தன்னுடன் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை என யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். மாறாக தான் யாழ்ப்பாணம் நூலகத்தை காண்பிப்பதற்காகவே அங்கு சென்றதாகவும் அவர் கூறினார்.