மனிதர்கள் ஒரு பகுதியின் மீதோ, நாட்டின் மீதோ படையெடுப்பதை பற்றி நீங்கள் நிறைய வரலாற்றுக் கதைகளை கேட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள். ஏன், அவற்றில் பல படையெடுப்புகள் திரைப்படங்களாகக் கூட ஆண்டாண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், மத்தியதரைக்கடலின் மீது அந்த பிராந்தியத்துக்கு பரீட்சயம் இல்லாத நண்டு வகை ஒன்று படையெடுத்து, ஆக்கிரமித்து வருகிறது. இது எப்படி சாத்தியம்? என்று சட்டென நினைக்கத் தோன்றும்? உங்களின் கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
அக்டோபர் 2014இல், லோட்ஃபி ரபாவ்ய் என்ற ஆய்வாளர் உள்ளூர் மீனவர்கள் சிலவருடன் துனிசியாவில் உள்ள கேப்ஸ் வளைகுடாவில் உள்ள சிறிய கடலோர நகரமான கன்னூச் அருகே உள்ள ஆழமற்ற கடற்பகுதியில் பயணம் செய்தார். கடற்புல் மற்றும் பாசிகளின் படுக்கைகளை கடந்த மீனவர்களின் வலையில் வழக்கத்திற்கு மாறான ஒன்று அப்போது சிக்கியது.
அவர்களின் வலையில் சிக்கியது, அந்த பகுதியை பூர்வீகமாகக் கொண்டிராத, நீல நண்டு அல்லது போர்ட்னஸ் செக்னிஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை நண்டு. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் வலையில் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 24 நீல நண்டுகள் சிக்கின.
இதையடுத்து, துனிஸ் எல் மனார் பல்கலைக்கழகத்தில் அப்போது ஆராய்ச்சியாளராக பணியாற்றிய ரபாவ்ய், இந்த புதிய ரக நண்டுகளின் கண்டுபிடிப்பை ஆர்வத்துடன் சக ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இருப்பினும், அடுத்த ஒரே வருடத்தில் இந்த அன்னிய அல்லது வேற்றுநில நண்டு இனம் நாட்டிற்கே சாபமாக மாறும் என்பதை அவர் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை.
மிகக் குறுகிய காலத்திலேயே நீல நண்டுகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகின. டிஜெர்பா தீவில் உள்ள ஹக்கிம் கிரிபா என்ற மீனவர் இதுதொடர்பான தனது நினைவை நேற்று நடந்தது போல் விளக்குகிறார். “நாங்கள் பீதியில் உறைந்துவிட்டோம்” என்கிறார் கிரிபா. “எனது மீன்பிடிப்புகளில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் நீல நண்டுகளாகவே இருந்தன. அதை என்ன செய்வது என்று அப்போது எனக்கு தெரியவில்லை.”
ஆண்டுக்கு நான்கு முறை இனப்பெருக்கம் செய்யும் இந்த நீல நண்டுகள் சுமார் ஒரு லட்சம் நண்டுகள் உருவாகுகின்றன. அதுமட்டுமின்றி இந்த நண்டு வகை “மிகவும் ஆக்ரோஷமானது” என்று கிரிபா கூறுகிறார். இது வலைகளை சேதப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன், மீன்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நீல நண்டுகள் ஏற்படுத்திய மோசமான தாக்கத்தின் காரணமாக அவை உள்ளூரில் “டேஷ்” என்று இப்போதெல்லாம் அழைக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவை குறிக்க அரபு மொழியில் உள்ள சுருக்கச் சொல்லாகும்.
இந்த நீல நண்டுகளின் பெருக்கம் முதலில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டது.
“எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று கூறுகிறார் துனிசியாவில் மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் ஜார்சிஸ் என்ற அமைப்பின் தலைவரும், மீன்பிடி பொறியாளருமான ஃபாத்தி நலூஃபி. இந்த நண்டுகள் வலையில் சிக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, அவற்றை பிடித்த பிறகு அப்புறப்படுத்துவது மிகப் பெரிய தலைவலியாக மாறியதாக அவர் கூறுகிறார். எனவே, “வலையில் சிக்கும் நீல நண்டுகள் துறைமுகத்தில் குவிக்கப்பட்டன அல்லது அவை மீண்டும் கடலில் வீசப்பட்டன” என்று நலூஃபி கூறுகிறார்.
காலப்போக்கில் தலைகீழாக மாறிய சூழல்
இப்படி துனிசியா நாட்டின் மீன்பிடி துறையையே புரட்டிப்போட்ட இதே நீல நண்டுகள், இன்று பல வழிகளில் அந்த நாட்டின் மீன்பிடித் தொழிலை உயர்த்தியுள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம், ஆரம்பகால அதிர்ச்சிக்குப் பிறகு, இப்போது பிராந்தியத்தில் மிகவும் விரும்பப்படும் கடல் உணவுகளில் ஒன்றாக நீல நண்டுகள் மாறியுள்ளன.
நீல நண்டுகள் இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் தோன்றி, சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 1898இல் மத்திய தரைக்கடலை அடைந்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. அப்போதிருந்து, மத்தியதரைக் கடலில் பல்வேறு பகுதிகளில் நீல நண்டுகளின் இருப்பு பதிவாகி வந்துள்ளது.
“பல ஆக்கிரமிப்பு/ இடப்பெயர்ப்பு இனங்களைப் போன்று, காலநிலை மாற்றம் மற்றும் கடல் போக்குவரத்து அதிகரிப்பதன் காரணமாக மேற்பரப்பு நீர் வெப்பமடைவதன் மூலம் நீல நண்டின் பெருக்கமும் தீவிரமடைந்துள்ளது” என்று மத்தியதரைக் கடலில் பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஜமிலா பென் சூயிஸி கூறுகிறார். இவர்மத்திய தரைக்கடல் அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
நீல நண்டுகளை விட மோசமான புதிய அச்சுறுத்தல்கள்
உண்மையில் பார்த்தோமானால் நீல நண்டு மத்தியதரைக் கடலுக்கு தனியே பயணிக்கவில்லை. மத்தியதரைக் கடல் பகுதிக்குள் நுழைந்த மற்றொரு வேற்றினம் முயல்மீன் (சிகனஸ் ரிவலடஸ் மற்றும் சிகனஸ் லூரிடஸ்) என்று தெரிகிறது. நீல நண்டுகள் செய்யும் அட்டூழியங்கள் ஒருபுறமிருக்க, இந்த முயல் மீன்கள் பூர்வீக கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கு அத்தியாவசியமான தாவரங்களை விழுங்குகின்றன. இதனால், கிரீஸ் மற்றும் துருக்கியில் குறிப்பிட்ட ரகங்களை சேர்ந்த 65 சதவீத பாசிகள் குறைந்துவிட்டன.
இதுகுறித்து சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அட்ரியானா வெர்ஜஸ் பேசும்போது, “முயல் மீன் பொதுவாக வெதுவெதுப்பான நீரில் மட்டுமே இருக்கும். அவை வெப்பமண்டல இனம் என்பதால், அவற்றின் விரிவாக்கம் (கடல்) வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று கூறுகிறார்.
“எங்கள் ஆய்வில், அதிக எண்ணிக்கையிலான முயல் மீன்கள் மத்தியதரைக் கடலின் வெப்பமான கிழக்குப் பகுதிகளில் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்தோம்.”
அதிர வைக்கும் லயன்ஃபிஷ்
மத்தியதரைக்கடலில் புதிதாக நுழைந்துள்ள மற்றொரு புதிய உயிரினம் முன்னெப்போதுமில்லாத வகையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் லயன்ஃபிஷ் (Pterois மைல்ஸ்). இது கடுமையான விஷமுள்ள முதுகெலும்புகளை கொண்டுள்ள மிகவும் ஆக்ரோஷமான மீன் ஆகும்.
மத்தியதரைக் கடலின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நன்கு பரவிய நிலையில் உள்ள இது, இப்போது மேற்கு மற்றும் வடக்கு நகர்ந்து ஏஜியன் மற்றும் அயோனியன் கடல்களை நோக்கி பரவி வருகிறது. லயன்ஃபிஷ் சிறிய நாட்டு மீன்கள் மற்றும் நண்டு, நத்தையை ஒத்த உயிரினங்களை அதிக அளவில் சாப்பிடுகிறது. இதில் வியப்புக்குரிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இதன் வயிறு தன் அசல் அளவை விட 30 மடங்கு வரை விரிவடையக் கூடியது, இது அதிகளவிலான உணவை உண்பதற்கு உதவுகிறது.
உலகின் பிற பகுதிகளில் இந்த ரக மீன்கள் ஏற்படுத்திய தாக்கமானது இது எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகின்றன. உதாரணமாக, பஹாமாஸில், இரண்டே ஆண்டுகளில் இவை இரையாக உண்ணும் உயிரிகளின் எண்ணிக்கை 65 சதவீதம் குறைந்துள்ளது.
பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில், மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களுக்கு இந்த லயன்ஃபிஷ்களின் படையெடுப்பின் காரணமாக ஆண்டிற்கு10.2 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடலில் உள்ள லயன்ஃபிஷ்களை கொண்டு நடத்தப்பட்ட பகுப்பாய்வில், அவற்றின் இரைகளில் 95% சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க பூர்வீக மீன்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறாக வேற்று பகுதிகளை சேர்ந்த 986 வகையான கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தின் மூலம் உலகிலேயே மிகப் பெரிய அளவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான கடல் பகுதியாக மத்தியதரைக் கடல் உள்ளது. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) 2021இல் பட்டியலிட்ட 986 அன்னிய இனங்களில், 10% “ஆக்கிரமிப்பு” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அவை பொருளாதார அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துபவை என்று அதற்கு பொருள்.
“சமீபத்திய தசாப்தங்களில், அன்னிய இனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, பூர்வீக பல்லுயிர் பெருக்கத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளை முற்றிலும் சீர்குலைக்கிறது” என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.